திங்கள், 4 ஆகஸ்ட், 2025

கமிஷன்கள்.

 ஹேமா கமிட்டி அறிக்கையை கைவிட்ட கேரள அரசு ! 


2017 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் என்பவரால் நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதைத் தொடர்ந்து திரைத்துறையில் ஆண் நடிகர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றுசேர்ந்து ‘விமன் இன் சினிமா கலெக்டிவ்’ (WCC) என்ற அமைப்பைத் தொடங்கினர். அவர்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு ஓய்வுபெற்ற கேரள நீதிபதி ஹேமா தலைமையில் விசரணைக் குழு ஒன்றை அமைத்தது.


பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுவது எல்லாத்துறையிலும் தொடர்கிறது என்றாலும் சினிமாத்துறையில் அதை சந்திக்காத பெண்கள் குறைவு என்ற அளவுக்கு அது நடக்கிறது. நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை குழுவிடம் பல பெண்கள் துணிந்து புகார்களைக் கொடுத்தார்கள். அவர்களின் ஆடியோக்கள் வீடியோக்கள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் டிசம்பர் 2019 அன்று 300 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் பினராயி விஜயனிடம் சமர்ப்பித்தார் நீதிபதி ஹேமா.


ஆனால் விசாரணை அறிக்கைமீது எந்த நடவடிவக்கையையும் கேரள கம்யூனிஸ்ட் அரசு எடுக்கவில்லை. ஹேமா கமிட்டி அறிக்கையையும் பொதுவெளியில் வெளியிடவில்லை. இந்த நிலையில் 4 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் ? என்ற கேள்வியுடன் வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் கேரள அரசை கண்டித்ததோடு RTI மூலம் அறிக்கை தரப்படவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. 


ஆகஸ்ட் 19, 2024 அன்று வெளியான அந்த அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கேரள திரைப்படத்துறையில் பல முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் என பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்தவர்களின் பட்டியல் வெளியானது. இந்தியா முழுவதும் எந்த பெரிய சூப்பர் ஸ்டாரும் பெண்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தத்தக்கது.


 "இந்த நடிகர்களை நாம் அளவுக்கு அதிகமாக நேசிக்கின்றோம். ஆனால் இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக மாறி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்," என்று தீதி என்ற நடிகை கூறினார். நடிகர்கள் மட்டுமல்ல கேரள கம்யூனிஸ்ட் அரசும் பாதிக்கப்பட்ட பெண்களை கைவிட்டுவிட்டது. 


AMMA  என்ற பெயரில் இயங்கும் கேரளா திரைத்துறை சம்மேளனம் கலைக்கப்பட்டது. புகார் குடுத்த பெண்கள் இனி திரைப்படத்துறையில் பயணிக்க முடியாது என்ற ஆணாதிக்க நடிகர்களின் மிரட்டல்களுக்கு உள்ளானார்கள். 


ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் 35 வழக்குகள் பதியப்பட்டன. அந்த 35 வழக்குகளையும் முடித்து வைப்பதாகக் கேரளா அரசின் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டது.


புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்கள்  யாரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய ஆண்களுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க முன்வராததால் 35 வழக்குகளையும் கைவிடுகிறோம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. 


ஹேமா கமிட்டி அறிக்கை பெண்களுக்கு தங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைத் தந்தது தைரியத்தைத் தந்தது அதனைப் பார்த்து மேற்குவங்க அரசும் குழுவை நியமித்தது ஆனால் ஆண் அதிகார வர்க்கத்தை எதிர்த்து நீதி கேட்டு போராடி வெற்றிபெற்றுவிட முடியுமா ! அது பொதுவுடைமை பேசும் கம்யூனிஸ்டுகளின் அரசாகவே இருந்தாலும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவிட முடியுமா ! இந்த கையறுநிலையைத்தான் பாதிக்கப்படும் பெண்களுக்கு பரிசளித்திருக்கிறார்கள். 


பாதிக்கப்பட்ட பெண்களின் மௌனத்தில் இருந்துதான் பல பொறுக்கிகள் போராளிகளாக வளம் வருகிறார்கள் என்பதும் உண்மை. தொடர்ந்து மிரட்டப்படுவதும் அவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கி எதற்கு போராட வந்தோம் நாமும் சமாதானமாகப் போயிருக்கலாம் என்ற மனவுளைச்சகளுக்குத் தள்ளுகிறார்கள். 


ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு முடிவுகட்டி கேரளா அரசும் அதற்கு துணைபோகியிருக்கிறது.


அரசு அதிகாரம் ஆட்சி என்று வரும்போது அதைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எந்த எல்லைக்கும் போவதில் கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றும் விதிவிலக்கில்லை. ஆனால் இங்கு இருக்கும் சிலர் அங்கே பார்த்தீர்களா என்கிறார்கள் இதைப்போன்ற விஷயங்களில் மௌனமாகி விடுகிறார்கள்.