வியாழன், 12 நவம்பர், 2020

 இந்திய ஆண்கள் பலசாலியாக வெளிகாட்டிக்கொள்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் அவர்கள் மனதளவில் பெண்ணிடம் தனது காதலையும், நட்பையும் முறையாக வெளிப்படுத்த தெரியாத பலவீனமும், வன்முறையும் நிறைந்தவர்கள். நிலக்கிழாரின் மனநிலையும், சாதித் திமிரும் சேர்ந்த கலவையே இந்திய ஆண்மனம். பெண்களை தங்கள் பயன்பாட்டிற்குரிய உடமைகளாக, பொருளாக கருதுகிற ஆதிக்க மனநிலை அவர்களிடம் அதிகமாகவுள்ளது. வன்முறை அதிகாரத்தினால் பெண்களின் காதலையும், உறவையும், நட்பையும் பெறலாமென்று நம்புகிறார்கள். இதையே ஆணின் குணங்களாகவும், சிறப்பியல்பாகவும் கருதப்படுகிறது. பெண்ணின் சுதந்திரம், விருப்பம், சம்மதத்தை கேட்கபதும், பொருட்படுவதும் இல்லை. காதலிக்க மறுக்கிற அல்லது காதலிலிருந்து விடுபடுகிற பெண்கள் மீது ஆசிட் வீசுவது, கொலை செய்வது, அவதூறு பரப்புவது ஆகிய குற்றங்கள் பெருகுகின்றன.


தான் விரும்பாத எதையும் மறுக்க பெண்ணுக்கும் உரிமை உண்டு என்பதை ஆண்மனம் ஏற்க மறுக்கிறது. கணவனோடு உறவு வைத்துக்கொள்ள முடியாத அல்லது விருப்பமில்லாத நேரத்தில் மறுப்பதற்கு மனைவிக்கு முழுவுரிமையுண்டு. அத்தகைய நேரத்தில் கணவன் அத்துமீறி உறவில் ஈடுபடுவது பாலியல் பலாத்காரம். ஒருவரது சம்மதமில்லாமல் அவரது உடல் மீது செய்கிற மிகப்பெரிய வன்முறையிது. பல்வேறு மேற்குலக நாடுகளில் “பாலியல் தன்னாட்சி உரிமை” பெண்களுக்கு சட்ட ரீதியாக இதிலிருந்து முழு பாதுகாப்பளிக்கிறது. அத்துமீறுகிறவர்கள் எவராக இருந்தாலும் சட்டரீதியாக தண்டிக்கப்படுவார்கள். பெண்களின் உரிமைகளுக்கான தனிச்சட்டம் இயற்றி பெண்களுக்கு முழுமையான பாலியல் தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்த வர்மா குழு முன்மொழிந்திருக்கிறது. இந்தியச் சட்டவியலில் மிக முற்போக்கான மாற்றமிது. பெண்களின் வாழ்வில் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும் வலியுறுத்துகிறது. இந்தியாவில் அனைத்து திருமணங்களையும் நீதிபதியின் பார்வையில் பதிவு செய்தல். வரதட்சணை கோராமல், இருவரின் சுதந்திரமான முழு சம்மதத்துடன் திருமணம் நடைபெறுவதை நீதிபதி உறுதிப்படுத்த வேண்டும் போன்ற பரிந்துரைகள் பெண்களின் உரிமையை வலுப்படுத்துகின்றன.

பாலியல் பலாத்கார வழக்குகளை பதிவு செய்வதில் காவல்துறை நிலபிரபுத்துவ மனநிலையில் இருப்பதாக சாடுகிறது வர்மா குழு. காவல்த்துறையிடம் வருகிற ஒவ்வொரு பாலியல் பலாத்கார குற்றங்களையும் கண்டிப்பாக வழக்குகளாக பதிவு செய்தல். பாலியல் பலாத்கார வழக்கை பதிவு செய்ய மறுக்கிற அல்லது புலன்விசாரணையை முடக்க முயற்சிக்கிற அதிகாரிகளை தண்டித்தல் ஆகியவை காவல்துறையை செயல்பட தூண்ட தேவையான பரிந்துரைகள். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையான நீதியை வழங்குவற்கு தற்போதைய மருத்துவ பரிசோதனை முறை எதிராகவுள்ளது. அதனால் பாலியல் பலாத்கார வழக்குகளுக்கு உலகின் சிறந்த வல்லுநர்கள் அறிவுறுத்துகிற முறைகளை மருத்துவ பரிசோதனைக்கு நடைமுறைப்படுத்த வலியுத்துகிறது.